Showing posts with label தமிழ் கட்டுரைகள். Show all posts
Showing posts with label தமிழ் கட்டுரைகள். Show all posts

Wednesday, March 13, 2013

இது வீட்டு நூல், நாட்டு நூல், உலக நூல்

மு. பெரியசாமி

(இக்கட்டுரையின் தலைப்பு திருக்குறளின் பொதுமைத்தன்மைப் பற்றி திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்கள் கூறிய கருத்து ஆகும் )

திருக்குறள், தமிழின் மற்ற அனைத்து நூல்களையும் விட தனிப்பெருமையும் சிறப்பும் வாய்ந்த நூல் ஆகும். ஏனென்றால் சுமார் 60க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறப்புமிக்க நூல் திருக்குறள். முதன்முதலில் இலத்தீன் மொழியில் C.J. பெஸ்கி (வீரமாமுனிவர்) என்பவரால் 1730ல் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பலரால் பல மொழிகளில் இன்றும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றது.
 திருக்குறளின் பெருமையை பற்றி பேசாத தமிழறிஞர்கள் இல்லை என்றே கூறலாம். சங்க கால புலவர்களான கபிலர், நக்கீரர், ஔவையார், சீத்தலை சாத்தனார் என அப்பொழுதே இதன் சிறப்பை பலர் வியந்து பாராட்டியுள்ளனர்.

"திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் ஏற்பட" என்கிறார் பெரியார்.
நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்னும் அறிஞரோ, திருக்குறளை வாழ்வுக்குரிய அன்புநெறியை கூறும் உயர்ந்த நூல் என்றும், உயர்ந்த ஞானத்தை புகட்டும் உயர்மொழிகளின் தொகுப்பு இதுபோல் உலக இலக்கியத்தில்  இல்லை என்றும் கூறிப் போற்றியுள்ளார். இப்படி பலர் திருக்குறளைப்பற்றி கூறிய புகழுரைகளை ஒரு பெரும் நூலாகவே தொகுக்கலாம். இத்தகு புகழுக்கு மிக முக்கிய காரணம் திருக்குறளின் எளிமை மற்றும் செறிவு மிகுந்த கருத்துக்கள்தான். பழந்தமிழ் இலக்கியங்களில் தலைசிறந்த நீதி நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகது.

உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், தமிழ்மறை, என பல பெயர்களில் திருக்குறள் போற்றப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால் திருக்குறள் என்பதும் அதனை புகழ்ந்து கூறப்படும் பெயர்களில் ஒன்று. அதன் இயற்பெயர் என்னவென்று இன்னும் அறியப்படவில்லை. இதை இயற்றியவரின் பெயரான திருவள்ளுவர் என்பதும் அவரது இயற்பெயர் கிடையாது. அவரைபற்றிய வரலாறும் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அவரைபற்றிய புனைக்கதைகள் பல உண்டு. அவரைப்பற்றி இதுவரை அறிந்தவை என்னவென்றால் அவர் ஒரு தமிழ்ப்புலவர் என்பதும் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டும்தான். இன்று நாம் ஓவியங்களிலும், சிற்பங்களிலும் கானும் உருவமும் திருவள்ளுவரைப் பற்றிய கற்பனை உருவமே ஆகும். திருக்குறளின் காலமும் இன்னது என்று சரியாக வரையறுக்கப்பட முடியவில்லை. அது சங்க காலத்தைச் சேர்ந்த நூல் என்றும், கி.மு. 30ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்றும் பலர் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து நிற்கும் அதன் பெரும்புகழுக்கு அதனுடைய காலம் மாறாத உண்மை நெறி, ஆழமான கருத்துக்கள், கவிச்சுவை, எளிமை ஆகியன குறிப்பிடத்தக்க காரணங்களாகும். அதேபோல் எவ்வித சார்புமற்ற அதன் பொதுமைபண்பு (objectivity) மிக முக்கியமானதாகும். வள்ளுவர் எந்தவொரு மதத்தைபற்றியோ, இனத்தைபற்றியோ, நாட்டைபற்றியோ, மன்னனைப்பற்றியோ தனது திருக்குறளில் குறிப்பிடவே இல்லை. அந்த அளவிற்கு பரந்த மனப்பாங்கோடு குறளை இயற்றியுள்ளார். அதனால்தான் இன்றும் இந்துக்கள், இசுலாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், கிறித்துவர்கள் என பல சமயத்தாரும் திருக்குறளை சொந்தம் கொண்டாடுகின்றனர். 

இதுபோல் அக்காலத்தின் இலக்கிய மரபுகளை மீறி புதுமை படைத்த நூல் திருக்குறள். 'பிறப்பால் அனைவரும் சமம்' என்னும் சமத்துவ கொள்கையை பறைசாற்றிய நூல் திருக்குறள். எந்த ஒரு கருத்தையும் ஆராய்ந்து அதன் உண்மையை உணர வேண்டும் என்னும் பகுத்தறிவை பேசிய நூல் திருக்குறள். அக்காலத்திலேயே 'மது அருந்துவது கூடாது' என்கிற சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்திய நூல் திருக்குறள். இப்படி ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும், ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும், ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என பலதரப்பினரின் கடமைகளை உணர்த்தும் நூல் திருக்குறள். இவ்வாறு பல சமூக கருத்துக்களை உள்ளடக்கியது திருக்குறள்.


நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், இப்படிப்பட்ட ஆழமான கருத்துக்கள் முழுக்கவும் ஒரு தனிமனிதனின் உருவாக்கம் மட்டுமே அன்று, அது அந்த சமுதாயத்தில் பரவியிருந்த கருத்துக்களின் வெளிப்பாடு. அப்படிப்பட்ட  சமுதாயம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதன் வழித்தோன்றிய சமுதாயமான நம் சமுதாயத்தை நாம் இன்று எப்படிப்பட்டதாக மாற்றிவைத்திருக்கின்றோம். இப்படி ஒரு நூலை இயற்றிய வள்ளுவருக்கு கோட்டமும் சிலையும் அமைத்ததோடு சரி (அவைகளின் நிலைமையும் என்னவென்பதை, அங்கு செல்பவர்கள் கண்கூடாக பார்க்கலாம்). இவ்வளவு அற்புதமான நூலையும் அதன் செறிவான கருத்துக்களையும்  நாம் நம்முடைய சமூகத்தில் எந்த இடத்தில் வைத்திருக்கின்றோம். நம்மில் எத்தனை பேருக்கு குறைந்தது 10 திருக்குறளை அதன் அர்த்தத்துடன் தெரியும்? தேசிய நூலாகவே அறிவிக்க தேவையான அனைத்து தகுதிகளையும் உடைய திருக்குறளுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? சாக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கான்பூசியஸ், சேக்சுபியர் என பிற நாட்டு  அறிஞர்களை போற்றும் நாம், நம்  நாட்டு அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் என்று போற்ற போகிறோம். நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று நாம் கூவுகிறோம், ஆனால் நம்முடைய நாட்டை சேர்ந்தவர் நம்முடைய மொழியை சேர்ந்தவர் என்றால் எப்பொழுதும் இளக்கார மனப்பான்மைதான். இதை எப்பொழுது மாற்றிக்கொள்ள போகின்றோம்.

Wednesday, November 28, 2012

இரத்ததானம்: ஒரு விழிப்புணர்வு கட்டுரை

மு. பெரியசாமி


இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்!

பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு! பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு!

மனிதநேயத்தை சொற்களால் அல்ல இரத்ததானத்தால் வெளிப்படுத்துவோம் !

இது போன்ற வாசகங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களின் இடையே பிரபலங்கள் கூறுவதை நீங்கள் விரைவில் கேட்க நேரலாம் (அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முனைப்பாய் இருந்தால்). ஏனென்றால் இரத்ததானத்திற்கான தேவை ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால் பல இடங்களில் பற்றாக்குறைதான்  மிக அதிகளவில் உள்ளது.

இரத்ததானத்திற்கு தடையாக பல்வேறு மூடநம்பிக்கைகள் நம் நாட்டில் பரவிக்கிடக்கின்றது. நான் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் எனது கல்லூரி மூலமாக முதல்முறையாக இரத்ததானம் செய்துவிட்டு வீடு திரும்பினேன். என் கையில் இருந்த பிளாஸ்திரியை(band-aid) பார்த்துவிட்டு எனது தாயார் காரணம் கேட்க, நானும் இரத்ததானம் செய்ததை கூறினேன். கச்சேரி ஆரம்பமானது! ஏன் இரத்தம் கொடுத்தாய்? என்னை கேட்காமல் ஏன் கொடுத்தாய்? என்று பல கேள்விகள். அடுத்த நாள் உறவினர்களிடம் இருந்து வசைகள் மற்றும் மிரட்டல்கள். அவர்கள் அனைவருக்கும் விளக்கம் கூறினாலும் அதை அவர்கள் ஏற்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் புதுப்புது தவறான விளக்கங்களை கூறினார்கள்.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் நடந்தது. எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன் பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு படித்துகொண்டிருக்கின்றான். அவன் என்ன கூறினான் என்றால், இரத்ததானம் திருமணத்திற்கு முன் செய்தால் உடல்நலக்கேடு ஏற்படும் திருமணத்திற்கு பிறகு செய்தால் பிரச்சனை இல்லை என்றான். இவ்வாறு இரத்ததானம் பற்றிய மூடநம்பிக்கை என்பது கற்றவர் கல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் பலரிடம்  பரவிக்கிடக்கின்றது. ஆனால் இரத்ததானம் என்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காத, பாதுகாப்பான செயல்பாடு ஆகும். அதை அறியாமல் தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்பதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரத்ததானம் குறைவாகவே உள்ளது.

உலக மக்கள் தொகையில் 15 சதவீதமே உள்ள உயர் வருவாய் நாடுகளில் 50 சதவீத இரத்ததானம் செய்யபடுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகின்றது. நம் நாட்டில் இரத்தத்திற்கான தேவை 4 கோடி யூனிட் ஆனால் இருப்பதோ வெறும் 40 இலட்சம் யூனிட்தான் என ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. இரண்டு நொடிக்கு ஒருமுறை யாரேனும் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகின்றது. நம்மில், சராசரியாக மூன்றில் ஒருவருக்கு வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இரத்தம் தேவைப்படுகின்றது. இரத்தம் கொடுக்க தகுதியானவர்களில் வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே இரத்ததானம் செய்கின்றனர். இவ்வாறு இரத்த தானத்திற்க்கான தேவையை பல்வேறு புள்ளிவிவரங்களின் மூலம் அடுக்கிகொண்டே போகலாம்.

நம் நாட்டில் இரத்ததானம் செய்வதற்கு நீங்கள் 18 வயதை கடந்தவராகவும் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உங்களது உடல் எடை 45 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். உங்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில குறிப்பிட்ட நோய்கள் கடந்த சில நாட்களில் இருந்திருக்ககூடாது. இதுபோன்ற சில அடிப்படை தகுதி உடையவராக நீங்கள் இருக்கவேண்டும். இவை அனைத்தையும் இரத்தம் கொடுப்பதற்கு முன் நீங்கள் பூர்த்தி செய்யும் படிவத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலம், குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கின்ற காலம் மற்றும் மாதவிடாய் நாட்களில் அதீத இரத்தப்போக்கு மற்றும் வலி இருக்கும்பொழுது இரத்ததானம் செய்யமுடியாது.மது அருந்திய மற்றும் புகை பிடித்த  அடுத்த 24 மணி நேரத்திற்கு இரத்ததானம் செய்யமுடியாது. மேலும் இரத்தம் கொடுப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு நன்றாக உணவு உண்டிருக்க வேண்டும்.


பொதுவாக இரத்ததானம் செய்ய நீங்கள் சென்றீர்களானால் முதலில் ஒரு படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்வார்கள். அது உங்கள் உடல்நிலை சம்பந்தப்பட்ட விவரங்களை கோரும்  வினாக்கள் அடங்கிய படிவமாகும். பின்னர் உங்கள் எடை, இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிப்பார்கள். அனைத்து விவரங்களும் பெறப்பட்ட பின்னர் உங்களது முழங்கை மடிப்பில் சரியான நரம்பை கண்டறிந்து இரத்தம் எடுப்பதற்கான ஊசியை உட்செலுத்துவார்கள். அந்த இரத்தமானது சோடியம் சிட்ரேட், பாஸ்பேட், டெக்ஸ்ட்ரோஸ் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கிய நெகிழிப்பையில் செலுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். பொதுவாக 250 மிலி முதல் 450 மிலி வரை இரத்தம் எடுக்கப்படும். ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகின்றதா என்பதற்காக 10 முதல் 20 நிமிடம் காத்திருக்கச் சொல்வார்கள் அப்போது புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய சில உணவு வழங்கப்படும். இரத்தம் அளித்த 1 மணி நேரத்திற்கு புகை பிடிக்ககூடாது, 4 மணி நேரத்திற்கு மது அருந்தக்கூடாது. கையில் ஓட்டப்படும் பிளாஸ்திரியை 4 மணி நேரத்திற்கு எடுக்கக்கூடாது.

இந்த இரத்தமானது 13 வகை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் அந்த இரத்தமானது இரத்த சிவப்பு அணுக்கள் (RBC), இரத்த வட்டுக்கள் (Platelets), பிளாஸ்மாக்களாக  பிரிக்கப்பட்டு தேவைக்கேற்ப உபயோகப்படுத்தப்படுகின்றது. அதில் இரத்த சிவப்பு அணுக்கள் 35-42 நாட்கள் வரையிலும், இரத்த வட்டுக்கள் 5-7 நாட்கள் வரையிலும் பிளாஸ்மா ஒரு ஆண்டு வரையிலும் கெடாமல் பாதுகாக்க முடியும்.

இரத்தம் A, B, AB, O, என வகைப்படுத்தப்படும் என அனைவருக்கும் தெரியும். அதில் O  பிரிவு இரத்தம் தேவை மிகவும் அதிகமுள்ள வகையாகும். 'O-' பிரிவு "யுனிவேர்சல் டோனர்" என அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இவ்வகை இரத்தம் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் இது இரத்த சிவப்பு அணுக்களுக்கு மட்டும்தான் பொருந்தும். பிளாஸ்மா என்று எடுத்துக்கொண்டால் 'AB+' தான் "யுனிவேர்சல் டோனர்" எனப்படும்.

நாம் தானம் செய்த இரத்தம் 4-6 வாரத்திற்குள் நம் எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்துவிடும். ஆகவே  இரத்ததானத்தினால்  எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படுவது போன்றவை ஏற்படலாம். மற்றபடி அது சாதரணமானதுதான். இரத்ததானத்தினால் உடல்நலத்திற்கு கேடு என்பதெல்லாம் ஆதாரமற்ற வாதங்கள்.

நம்மில் பலர் இரத்தம் என்பது விபத்து நேரத்தில் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்கின்றோம்.  ஆனால் அது உண்மையல்ல. இரத்தமானது இதய அறுவை சிகிச்சையின்போது , ஒருசில புற்றுநோய் சிகிச்சையின்போது , பிரசவத்தின் போது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது, என பல நேரத்தில் பயன்படுகின்றது. இதனால் நான் இறுதியாக குறிப்பிட விரும்புவது ஒன்றுதான்,

இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்!

Wednesday, September 05, 2012

அடையாள நாள் அல்ல; இது ஒரு மகத்துவத் திருநாள்!

தியாநேசு ரவிச்சந்திரன் 

     இன்று ஆசிரியர்கள்  தினம்.  நம் ஆட்டோகிராப்பை சற்று திருப்பிப்பாருங்கள், நம் வாழ்வில் ஒளியை பரப்பிய நம் ஆசிரியர்களின் நினைவுகள் பல்லாயிரம்! ஆசிரியர் என்பவர் ஒரு மாணவனுக்குப் பாடம் சொல்லிவிட்டுப் போகிற நபர் அல்ல; அவனின் வாழ்கையையே தீர்மானிக்கிற ஆற்றல் படைத்தவர். எனக்கு நீண்ட காலமாகவே ஒரு கேள்வி சற்று புதிர்போல் விளங்காது நிற்கிறது. 'ஆசிரியர்' என்பது ஒரு பணியா? ஊழியமா?? அல்லது தொண்டா??

  இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டால் தொண்டு அல்லது சேவை என்பார்கள்! ஏன்? அவர்களுக்கு உதியம் என்றொன்று உண்டு, ஆனால் அவர்களின் பணிக்கு அது ஈடாகும் என்று சொல்லமுடியாது. நம் பண்பாட்டில் ஒரு வழக்கம் உண்டு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று. இதில்  தெய்வத்தை விட்டுவிடுங்கள், அது நம் பார்வையில் வராது. ஆனால், நாம் 'குரு' என்பதை மாத-பிதாவிற்கு நிகராக வைத்திருக்கிறோம். ஒரு தாய், நான் ஆறு வருடங்களாக ஏன் பையனுக்கு தாயாக வேலைபார்க்கிரேன் என்று ஒரு பொழுதும் கூற மாட்டாள். எந்த தகப்பனும் என் மகளுக்கு தந்தையாக பல்லாண்டு காலம் பணிசெய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல மாட்டான். எப்படி தாய் தந்தை ஒரு குழந்தைக்கு உறவுமுறையோ, அதேபோலத்தான் ஆசிரியரும். அது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் பந்தம். 

    எனவே அப்படி ஒரு புனிதமான உறவுமுறை என்று சொல்லும்பொழுது, ஒவ்வொரு மாணவனையும் தங்களது பிள்ளைகளாக ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். தன்னிடம் படித்த மாணவன் தோல்வியுற்றான் என்றால் (பாடத்திலும் வாழ்க்கையிலும்) , ஆசிரியர்கள் வருத்தப்பட வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் அவ்வாறு இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. வெறும் பாடம் நடத்துவது மட்டும் அவர்களின் கடமையல்ல. ஏனெனில், அவர்களின் பங்கானது மாணவர்களின் வாழ்கையை மட்டும் தாக்கப்போவதல்ல, அவர்களின் வருங்கால தலைமுறையும் தான். இதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

   சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமுறை இந்துக்கள் சட்டம் (Hindu Law) தொடர்பாக வழக்கு ஒரு நடந்துகொண்டிருந்தது. அப்போது நீதியரசர் முன் அந்த வழக்கை ஒரு மூத்த வழக்கறிஞர்  நடத்திக்கொண்டிருந்தார். அவர் மிக வயதானவர்; மிக மிக மெதுவாக நிதானமாக ஜவ்வைபோல் இழுத்து இழுத்து, கருத்துக்கள் எல்லாம் நன்கு விளங்கும்படி தன வாதங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார். பொறுமை இழந்த நீதியரசர், சற்று வேகமாய் வழக்கை முடிக்கும் எண்ணத்தில் அவரைப் பார்த்து, "உங்கள் வாதங்கள் புரிகின்றன, நீங்கள் அடுத்த விஷயத்திற்கு போலாம்" என்றார். அப்போது நிமிர்ந்த பார்வையுடன்  நகைத்த அந்த வழக்கறிஞர் நீதிபதியைப் பார்த்து, "மை லார்ட், நீங்கள் சென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும்பொழுது இந்துக்கள் சட்டத்தில் எத்தனை மதிப்பெண் வாங்கினீர்கள்  என்று  நினைவிருக்கிறதா??" என்று வினவினார். ஒரு நீதிமன்றத்தில் அப்படியெல்லாம் நீதிபதியைப் பார்த்து ஒரு வழக்கறிஞர் கேள்வி கேட்க முடியாது. உடனே அந்த அமர்விலிருந்த மற்றொரு நீதியரசரிடம் தான் அந்த பாடத்தில் தவறியதை சற்று தயக்கத்துடன் சொன்னார். அப்போது சிரித்துக்கொண்டே அந்த வழக்கறிஞர், " ஐயா, நான் அதை கல்லூரியில் நடத்தும்போது தங்களுக்குப் புரியவில்லை அதனால்தான் இப்போதாவது சற்று புரியும்படி உங்களுக்கு நடத்த முயன்றேன்" என்று வேடிக்கையாய் சொன்னாறாம். அந்த வழக்கறிஞர் தான் அந்த நீதிபதியின் கல்லூரி ஆசிரியர். ஒரு ஆசிரியரைத்தவிர வேறு யாராவது அந்த இடத்தில் அப்படி உரிமையுடன் பேச முடியுமா??

   பள்ளி கல்லூரிகளிலெல்லாம் இன்றைக்கு ஆசிரியர்கள் தினம் என்ற பெயரில் நிறைய சடங்குகளெல்லாம் நடக்கும். ஆனால் இத்திருநாளில், ஒவ்வொரு மாணவனும் (மற்றவர்களும்  தான்) தங்களது ஆசிரியர்களின்  பங்கை உணர வேண்டும். அவர்களின் ஊக்கமே நம்மை இத்தனை காலமும் அழைத்துவந்துள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள், தங்களின் உண்மையான கடமையை உணருதல் அவசியம். நீங்கள் ஒன்னும் விற்பன்னர்கள் இல்லை, உங்களின் அறிவை பணத்திற்கு விற்க; நீங்கள் பணி செய்வதில்லை, ஊதியதிர்கேற்ப வேலை பார்பதற்கு. நம் வாழ்வில் நினைவுபடுத்தப்படுகிற, நம்மை ஊக்கப்படுத்திய  நம் ஆசிரியர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் ஒரு சராசரி ஆசிரியரைப்போல் இல்லாமல் வேறுபட்டிருப்பார். ஆசிரியர்கள் பொதுவாக அப்படி இருப்பதில்லை என்பது சற்று வருத்தமே. இந்நாளானது, ஆசிரியர்களுக்கான அடையாள நாளல்ல, ஆசிரியத்தின் மகத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் திருநாள்! ஆசிரியர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்...

Wednesday, June 13, 2012

அந்த கேள்விக்கு வயது 102

தியாநேசு ரவிச்சந்திரன்

     சமீபத்தில் இணையத்தில் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு புத்தகத்தின் தலைப்பு என்னை ஈர்த்தது. "அந்த கேள்விக்கு வயது 98" என்பதுதான் அத்தலைப்பு. அதென்ன அப்படி ஒரு தலைப்பு என்று என்னை சிந்திக்க வைத்தது. ஏதோ ஒரு கேள்வி தொண்ணூற்றிஎட்டு ஆண்டுகளாக அந்நூலினுடைய ஆசிரியர் திரு. இரா.எட்வினை குடைந்துகொண்டிருக்கிறது என்று விளங்குகிறது. அது என்ன 98 ஆண்டுகள் பழமையான கேள்வி என்று பார்த்தால், அதற்கு ஒரு ஆழகான விடை அந்நூலின் ஒரு கட்டுரையில் கிடைக்கிறது.

     பாரதியார் புதுவையில் வாழ்ந்த காலத்தில், எழுத்தாளர் வ. ராமசாமி ஐயர் அவரைப்பார்க்க அவர் வீட்டிற்கு வருகிறார். வ.ரா என்றால்தான் சமூக இலக்கிய உலகில் அவரைத் தெரியும். அவர் பாரதியின் வீட்டுக்கதவைத் தட்ட, பாரதியார் கதவைத் திறந்தார்.  பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும், எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார், தன்னை அறிவாளி என்று ஏற்பார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். “உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு” என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார். திகைத்த வ.ரா பாரதியைப் பார்த்து, "ஐயா நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார். ஆங்கிலத்தில் பேசியதால் நீ பாலுவைதான் பார்க்கவந்தாயோ என்று நினைத்தேன் என்று நயமாகக்கூறிவிட்டு  பாரதியார் ஒரு கேள்வி கேட்டார்,

“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்களோ தெரியவில்லையே ?? ”

     இதுதான் அந்தக் கேள்வி, அவர் கேட்டது 1910-ஆம் ஆண்டு. அந்தப் புத்தகம் வெளிவந்தது 2008-இல்,  எனவே அக்கேள்விக்கு வயது 98 என்கிறார் ஆசிரியர், இப்போது வயது நூற்றாண்டு கொண்டாடிய 102! நூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்று பாரதி கேட்ட கேள்வி இன்றுவரை மிச்சப்பட்டுக்கிடக்கிறது என்பதுதான் நூலாசிரியருடைய ஆதங்கம்.

    இப்போது நாம் அந்தக்கேள்விக்கு வருவோம். ஆங்கிலத்தில் பேசினால்தான் நாம் அறிவாளிகள் என்று கருதப்படுவது இன்றைக்கும் நம் சமூகத்துடைய நடைமுறையாக இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் இதே நிலைதான் இருந்திருக்கிறது. நாம் அடிமை நிலையிலிருந்து விடுபட்டிருக்கிறோமே தவிர, அடிமை மனத்திலிருந்து நாம் இன்னமும் மீளவில்லை. அன்றைக்கெல்லாம் ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கம் இருந்தது. ஆங்கிலம் தெரிந்தால்தான் அரசுப்பணி என்ற நிலை இருந்தது. வெள்ளைக்காரன் போய்விட்டான், இன்னமும்  வெள்ளையனின் மொழியும் நிறமும் நம்மை ஆள்கிறது. வெறும் அரசாங்கத்தின் மொழியாக மட்டுமல்ல, சமூகத்தின் மொழியாக மட்டுமல்ல, உள்மனத்தில் நம்மை ஆள்கின்ற மொழியாகவும் ஆங்கிலமே இருக்கிறது. இது எவ்வளவு பெரிய அடிமைத்தனம்? ஆங்கிலமே பயன்படுத்தக்கூடாது என்பது இதன் பொருள் அல்ல. இரண்டு தமிழர்கள் பேசிக்கொள்ளும்போது ஆங்கிலத்திற்கு அங்கு என்ன வேலை என்பதுதான்.

 பெரும்பாலான பள்ளிக்கூடங்களிலே நாம் பார்க்கிறோம், ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அல்லது தமிழில் பேசினால் மாணவர்களுக்குத் தண்டனை. ஆங்கிலம் உலக மொழி எனவே அவர்களுக்கு அத்தகு பயிற்சி தேவை என்கிறார்கள் அது உண்மைதான். ஆனால் குழந்தைகளின் தாய்மொழித் திறனையும் உடன் வளர்க்க எந்த முயற்சியும் பள்ளிகள் எடுப்பதில்லை. விளைவு, நாமே நம் மொழி மதிப்பற்றது என்று எண்ணுகிறோம்; நம் மொழியை மறந்தும்விடுகிறோம். பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் மொழியை தேர்வு செய்ய தயங்குகிறான் காரணம், அவனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதாம்! வீட்டில் என்னைப்பெத்த அம்மா எனக்கு சோறு போடமாட்டேன் என்கிறாள், அதனால் பக்கத்து வீட்டாரிடம் கையேந்துகிறேன் என்பதுபோலல்லவா இருக்கிறது?

    இங்கிலாந்து நாட்டிற்கு மிக அருகாமையில் உள்ள பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு மொழிதான் அவர்களின் முக்கிய மொழியாக உள்ளது. ஜெர்மனி-இல் கூட ஜெர்மன்  மொழிதான் வாழ்கிறது. அவர்களின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, கல்வி, அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் உட்பட அனைத்தும் அவரவர் மொழியில்தான். தாய்மொழியிலே தான் எல்லப்பாடங்களையும் மேலைநாட்டுப் பிள்ளைகள் படிக்கிறார்கள். எங்கெல்லாம் அறிவியல் வளர்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் தாய்மொழி வழியாகத்தான் கல்வி நீள்கிறது. ஜப்பானியப் பிள்ளைகள் ஜப்பான் மொழியிலேதான் கல்வி கற்கின்றனர். சீனத்துப்பிள்ளைகள் சீன மொழிகளில்தான் படிக்கின்றனர். வல்லரசு நாடுகள் அனைத்திலும் இப்படித்தான். இந்தியா போன்ற காலனிய நாடுகள் பலவற்றிலும் கூட அவரவர் மொழிதான் வாழ்கிறது.

    இது எந்த மொழியின் மீதான எதிர்ப்புணர்வு அல்ல. நாம் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது வேறு; இன்னொரு மொழிக்கு அடிமையாவது என்பது வேறு. மற்ற மொழியில் பேசுவதென்பது வேறு; தமிழறிந்த தமிழனிடமும் மற்ற மொழியில் பேசுவதென்பது வேறு. பாரதி அப்படி பிற மொழிகளை எதிர்க்கிறவராக இருந்திருந்தால் பிற மொழிகளை அவர் கற்றிருக்கமாட்டார். "யாமறிந்த மொழிகளிலே" என்று பாடியவரில்லையா? பல மொழிகளிலும் புலமை பெற்ற பாரதியார் தான் தமிழ் தெரிந்த தமிழனிடமும் ஆங்கிலத்தில் பேசுகிறாயே இது அவமானமாக இல்லையா என்கிறார். அந்த அவமானத்தை இன்றுவரை நாம் துடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட அவரவர் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கோ ஆங்கிலத்தில்தான் பேசுவோம் அதுவும் அரைகுறை ஆங்கிலத்தில்.

     ஆங்கிலத்தில் பேசுகிற அனைவரும் அறிவாளி என்றால் அது அப்பட்டமான மூடத்தனம் இல்லையா? ஒருவன் என்ன பேசுகிறான் என்பதைவைத்தே அவன் அறிவாளியா முட்டாளா என்று கூறமுடியுமே தவிர எந்த மொழியிலே  பேசுகிறான் என்பதைவைத்து சொல்லமுடியாது. நம் தாய்மொழியிலே பேச நாம் ஏன் தயங்கவேண்டும்? ஆங்கிலம் பேசுவதில் என்ன கௌரவத்தைக் கண்டோம்? எனவே, மொழி என்பது நம் தாய்வழி மரபுவழிச் சிந்தனையாக தான் இருக்க முடியும். பிற மொழிகளையெல்லாம் கற்றுக்கொள்ளலாம். தமிழ் தெரியா பிற மொழியாளர்களிடம் அவர்கள் மொழி தெரிந்தால் அதில் பேசலாம். ஆனால், இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் போதுகூட தமிழில் உரையாடவில்லை என்றால் தமிழ் எப்படி வாழும்? தமிழர்கள் என்ற உணர்வு மட்டும் ஓரமாய் நம் மனத்தில் இருந்து என்ன பயன், நம்மை இணைக்கும் மொழி வாழவில்லை என்றால்? பாரதி அன்று கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவருக்கும் பசுமரத்தாணிபோல் நினைவில் நிற்க வேண்டும். 

Saturday, March 31, 2012

கூடங்குளந்தான் தீர்வா?


மு.பெரியசாமி 

(இது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அல்லது ஆதரவான கட்டுரை அல்ல, தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை பற்றிய கட்டுரை)

மின்வெட்டு பிரச்சனை.........

தமிழ்நாட்டில் யாரிடம் இந்த வார்த்தைகளை சொன்னாலும் அவர் ஒரு பெருமூச்சு விட்டு அவருடைய சோகக்கதையை சொல்ல ஆரம்பித்துவிடுவார். இப்படி அனைத்து தரப்பினரையும் பொதுவாக பாதித்திருக்கிற பிரச்சனை இது. இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று அரசாங்கத்தைவிட அதிகமாக மக்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கு கூடங்குளந்தான் தீர்வு என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இல்லை! இல்லை! வேறு வழி இருக்கிறது என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். நாம் இதற்கான தீர்வை முன்வைப்பதற்கு முன்னாள் இந்த பிரச்சனைக்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

இந்த பிரச்சனையுடைய வேர் எங்கே உள்ளது என்று தேடிப்பார்த்தபோது அது நம்மை 1990ஆம் ஆண்டுக்கு அழைத்துச் சென்றது. அப்பொழுது நம் நாட்டின் பல துறைகள் தனியார்மயமாக்கபட்டது போல் மின்துறையும் தனியார்மயமாக்கப்பட்டது. அதனால் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த அரசாங்கம் முயலவில்லை. மேலும் மாநில அரசுகளையும் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி கேட்டு வர வேண்டாம் என்றும் சொல்லிவிட்டது. ஆனால் எந்த தனியாரும் எதிர்பார்த்ததை போல் மின் உற்பத்தியில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் நாட்டின் மின் உற்பத்தி குறைந்தது. மற்றொரு பக்கமோ ஆண்டுதோறும் மின்தேவை அதிகரித்துக்கொண்டே வந்தது. பின்னர் பிரச்சனை முற்றும் நேரத்தில் நம் அரசு ஒரு சில திட்டங்களை ஆரம்பித்துள்ளது. ஆனால் அவை உற்பத்தியை தொடங்க ஒன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும். இப்படி தேவை அதிகரித்தபொழுது உற்பத்தி அதிகரிக்கபடாதது முதல் பிரச்சனை. மேலும் சரியாக பணம் கொடுக்கவில்லை என்று சொல்லி தமிழகத்தில் மின் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 4 மின் உற்பத்தி நிலையங்கள் ( ஜி.எம்.ஆர். வாசவி – 196MW, பிள்ளைபெருமாநல்லூர் – 330.5MW, மதுரை பவர் – 106MW, சாமல்பட்டி பவர் – 105.66MW ) உற்பத்தியை நிறுத்திவிட்டன. 

அடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 3130 MW மின்சாரத்தை கொடுக்காமல் வெறும் 2000 MW மின்சாரம் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. அடுத்த மிக முக்கியமான் காரணம் மின் இழப்பு(Transmission loss). அதாவது மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கம்பி வழியே எடுத்துச்செல்லப்படும்பொழுது இழப்பு. இது போன்ற இழப்பு வெளிநாடுகளில் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் நம் மாநிலத்தில் அது கிட்டத்தட்ட 25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதற்கு காரணம் மின்மாற்றிகளிடையே மின்சாரம் கொண்டுசெல்லும் உயரழுத்த கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளிலிருந்து வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் தாழ்வழுத்த கம்பிகளின்  விகிதாச்சாரம் 1:1 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் அது நம் மாநிலத்தில் சரிவிகிதத்தில் இல்லை. அடுத்து இரண்டு மின்மாற்றிகளுக்குமிடையே இடைவெளி குறைவாக இருக்க வேண்டும். அதுவும் நம்மூரில் இல்லை. இதுபோன்ற காரணங்களால் இழப்பு நம்மூரில் அதிகமாக உள்ளது. விவாதிக்கப்படாத இன்னொரு மிக முக்கிய காரணம் மின் திருட்டு. இது நம்மூர் அரசியல் நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நேரத்தில் மிக யதார்த்தமாக நடப்பது. ஆனால் அரசாங்கம் போதிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இப்படி மின் பற்றாக்குறைக்கான காரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். 

இப்ப கூடங்குளத்துக்கு வருவோம்

அதிகரித்துள்ள மின்வெட்டிற்கு, மக்கள் கூடங்குளத்தை காரணமாக கருத ஆரம்பித்துவிட்டார்கள். இதில் உள்ள உண்மைகளை பார்போம். இதுவரை நம் நாட்டின் எந்த அணு உலைக்கும் உற்பத்தி திறன் (plant load factor) 40 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. கூடங்குளம் மூன்றாம் தலைமுறை நவீன உலை என்பதால் உற்பத்தி திறன் 70 சதவீதத்தை எட்டும் என்று வைத்துக் கொண்டாலும் 700 MW மின்சாரம்தான் உற்பத்தி செய்யும்.
 தமிழகத்திற்கு 50 % பங்காக 289 MW மின்சாரம் கிடைக்கும். அதில் மின் இழப்பு போக மீதம் 210 MW மின்சாரம் கிடைக்கும். ஆனால் நம் மாநிலத்தின் பற்றாக்குறையோ 2500 MW அளவை தாண்டுகின்றது. அதனால் கூடங்குளம் மட்டுமே தீர்வாகாது. மேலும் நாம் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும், கூடங்குளம் என்பது மின்வெட்டு பிரச்சனைக்கான காரணம் அல்ல. அது செயல்படுத்த முடியாத தீர்வுகளில் ஒன்று.

சரி செயல்படுத்த முடிந்த தீர்வுகளை காண்போம்

தற்பொழுதுள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு அனல்மின், புனல்மின் மற்றும் அணுமின் ஆகிய மூன்று முறைகளில் மட்டுமே பெருமளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும். அனல்மின் நிலையங்களுக்கு இனி போதுமான நிலக்கரி கிடைப்பது அரிது, மேலும் இயற்கைக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது. புனல்மின் நிலையங்களுக்கு நீர்போக்குவரத்து அதிகம் இருக்க வேண்டும், அதிக அளவில் அணைகள் கட்ட வேண்டும். அது மிகவும் சிரமமானது, மேலும் குறைவான அளவு மின்சாரமே கிடைக்கும். அணு மின் நிலையத்தை பொறுத்த வரை பல சாதகமான அம்சங்களும் இருக்கின்றன பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்காமல் அதை நடைமுறைபடுத்த முயல்வது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. சரி உடனடி மற்றும் நீண்ட கால மாற்று தீர்வுகள் என்னவென்று பார்போம். 

* குண்டு விளக்குகளுக்கு (Incandescent bulb) பதிலாக குழல் விளக்குகள் (Compact Fluorescent Lamps) உபயோகிப்பது. இது நீண்ட காலமாக கிடப்பிலிருக்கும் கோரிக்கை. இதை செயல்படுத்துவதன் மூலம் தமிழகம் 500 - 600 MW மின்சாரத்தை சேமிக்க முடியும். கேரளாவில் அரசாங்கம், குண்டு விளக்குகளுக்கு பதிலாக குழல் விளக்குகள் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஒரு யூனிட் மின்சாரத்தில் குண்டு விளக்கு 25 மணி நேரம் மட்டுமே எரியும் ஆனால் குழல் விளக்கு 36 மணி நேரம் எரியும். மேலும் இதன்மூலம் குறைந்தது 40 இலட்சம் கார்பன் கிரெடிட்களை பெற முடியும், அதனால் அரசாங்கம் 194 கோடி முதல் 360 கோடி வரை இலாபம் ஈட்ட முடியும்.

* நமது மாநிலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மிகவும் திறன் குறைவானதாக உள்ளது. அவற்றின் திறனை மேம்படுத்தி, பழுதானவைகளை மாற்றினால் சுமார் 1000 MW வரை சேமிக்க முடியும்.

* நம் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சுமார் 2500 MW திறனுள்ள மின் ஜெனரேட்டர்கள் உள்ளன. அவற்றை உபயோகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

* மின் இழப்பை 4 - 5 % அளவு குறைத்தால் கூட 1000 MW அளவிற்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். அதை அரசாங்கம் மின்மாற்றிகளுக்கு இடையே உள்ள தூரத்தை குறைப்பது, கம்பிகளுக்கு இடையே உள்ள விகிதாச்சாரத்தை சமமாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குறைக்கலாம்.


* நீண்ட கால தீர்வுகளுக்கு  சூரிய ஒளி ஆற்றல், காற்றலைகள், ஜியோதெர்மல் ஆற்றல் போன்ற சுற்றுசூழலுக்குகந்த மரபுசார மின்சார ஆற்றல்களில் இனியாவது முதலீட்டை அதிகரிக்கவேண்டும்.இவற்றின் மூலம்  நம் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்துகொள்ள முடியும். இது நீடித்த பயனையும் தரக்கூடியது. இப்படி இதன் சாதகமான அம்சங்களை அடுக்கிகொண்டே போகலாம். இதை பரவலாக்கும்போழுது இதன் செலவும் குறையும்.
* மின்சாரம் சம்பந்தமான ஆய்வுகளையும், புதிய முயற்சிகளையும் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் பொதுவாகவே அரசாங்கம் அறிவியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை. இந்த கருத்தை அரசாங்கம் உடைத்தெறிய வேண்டும்.    

* கடைசியாக மேற்கூறிய தீர்வுகளில் உகந்தவற்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் உற்பத்தி செய்வதற்கு இப்படி பல மாற்று வழிகள் உள்ளன, ஆனால் நாம் அதில் அதிக ஆர்வம் காட்ட மறுக்கின்றோம். மேலும் இந்த விஷயத்தில் நாம் அரசாங்கத்தையும், மின் வாரியத்தையும் மட்டும் குறைசொல்லிக்கொண்டு இருப்பது சரியல்ல. நம் நாட்டில் மின்சாரம் சம்பந்தமாக மேற்கொண்ட ஆய்வுகள் பல நாம் நம்முடைய மின் உபகரணங்களை சிக்கனமாக உபயோகிப்பதாலும்; பழுதில்லாத, திறன்மிக்க மின்சாதனங்களை  உபயோகிப்பதாலும் நாம் பல ஆயிரம் MW மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கின்றது. நம்மில் எத்தனை பேர் நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் மின்சேமிப்பு நடவடிக்கைகள் செய்திருக்கின்றோம், எத்தனை பேர் தேவைக்கேற்ப மின்சாதனங்களை உபயோகப்படுத்துகின்றோம், எத்தனை பேர் மின்சேமிப்பின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். வெகு சிலர் மட்டுமே. மாற்றத்தை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம். மின்சாரத்தை சேமிப்போம் நாட்டின் எதிர்காலம் பிரகாசிக்க!.

Tuesday, February 14, 2012

காதல் வாழ்க!!

தியாநேசு ரவிச்சந்திரன்

(இக்கட்டுரையால் நான் எனது பெற்றோர்கள் மற்றும் முந்தய தலைமுறையினரிடம் வம்பு வளர்த்துக்கொள்கிறேன் என்பதுமட்டும் நிச்சியம்!)

     'காதல்' பற்றிய  நம் நாட்டு மக்களின் பார்வைக்கும் மேலைநாட்டு மக்களின் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இங்கு இருக்கும் தடைகளில் ஆயிரத்தில் ஒன்றுகூட அங்கு இல்லை என்றும், அல்லது காதலுக்கு அங்கு தடையே இல்லை என்றும்  கூட துணிந்துசொல்லலாம். காதல் எதனால் இங்கு எதிர்க்கப்படுகிறது? ஏன் மேலைநாடுகளில் இல்லாத ஒரு தடை இந்தியாவிலே இருக்கிறது என்றால் அடிப்படையாக நாம் என்ன கருதிக்கொள்கிறோம் என்றால், பிள்ளைகள் தங்களுக்கான துணைவர்களை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள் எனவே பெற்றோர்கள் தான் அதைச் செய்யவேண்டும் என்றும், காதல் என்பது இயல்பாக அனுமதிக்கப்படுமானால் சமூகத்தில் ஒழுக்கம் தவறிப்போகும் என்பதுமான சான்றுகள் சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் செய்து கொடுக்கிற பெற்றோர்கள் அவர்களுக்கான துணையைமட்டும் தேடிக்கொடுக்க மாட்டார்களா, அதைமட்டும் ஏன் இவர்களாகவே தேடிக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. ஆனால், இதற்கான அடிப்படைக் காரணம் 'சாதி' என்பதுதான். காதல் அனுமதிக்கப்படுகிறபோது அவரவர் தங்கள் துணையை தங்கள் சாதியில் இருந்துதான் தேடிக்கொள்வார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே சாதி என்பது உடைபட்டுப்போகுமோ என்கிற அச்சத்தினால் சாதியைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் காதலுக்கு எதிர்ப்பு எழுகிறது. எனவேதான், காதலர் தினம் கூட பண்பாட்டின் பெயரால் இங்கு மறுக்கப்படுகிறது. 

     நாம் பார்க்கலாம்,
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள், 
இருவரும் மாறிப்பொக்கு இதயம் எய்தினர்" 
என்றுதானே கம்பராமாயணம் சொல்கிறது? இருவரும் காதல் வயப்பட்டார்கள் என்பதுதானே அதன் பொருள்? உண்மைதான்... அதற்கு அதுதான் பொருள். ஆனால், அது கம்பனின் கைவண்ணம். வால்மீகியின் கூற்றுப்படி ராமர் சீதை திருமணம் நடக்கிறபொழுது ராமருக்கு வயது பன்னிரண்டு, சீதைக்கு வயது ஆறு. அவர்கள் அவ்வயதில் அப்படியெல்லாம் காதலித்திருக்க வாய்ப்பே இல்லை; அப்படி எல்லாம் நடந்ததாக எங்கும் வால்மீகி கூறவுமில்லை. அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத்திருமணமாகவே நடந்துள்ளது. இந்தக் குழந்தைத்திருமணத்திற்குக்கூட என்ன அடிப்படை என்றால் சாதியை மீறிவிடக்கூடாது என்பதுதான். திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத வயதில் அதைச் செய்துவிட்டால், வேறு சாதியில் துணைதேட முனைய மாட்டார்கள் என்ற எண்ணம்தான். எல்லா அடிப்படையிலும் பெண்ணை மெல்ல மெல்ல கீழே அழுத்திவைத்து, எப்படி சாதி ஆதிக்கம் இருக்கிறதோ அப்படி ஆணாதிக்கத்தையும் இந்தச் சமூகம் தொடர்ந்து நிலைநிறுத்திவந்திருக்கிறது. 

     நாம் சற்று வெளிப்படையாகப்  பார்க்கலாம். பிராமண சமூகத்திலே உபநயனம் என்று ஒரு சடங்கு உண்டு. உபநயனம் என்றால் ஒரு பிராமண வீட்டில் பிறந்த ஒரு பையனை படிக்க அனுப்புவதாகும். அன்றைக்கெல்லாம் கல்வி என்றால் குருகுலவாசம்தான். வேதங்களைப் படிக்கச்செல்லும் போது அவன் இரண்டாவது முறையாகப்பிறக்கிறான் என்கிறது மனு. அச்சடங்கானது ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் தான் நடத்தப்படும். ஏன் பெண்பிள்ளைகளுக்கு இல்லையென்றால் பெண்களுக்குக் கல்வியே மறுக்கப்பட்ட சமூகத்தில் உபநயனம் எப்படி இருக்கமுடியும்? இந்தப் பெண்களிலே மட்டும் வேறுபாடே கிடையாது. எல்லாச் சாதியிலும் எல்லாச் சமூகத்திலும் பெண் என்பவள் அடிமைப்பட்டவள் தான். மனு மிகத்தெளிவாகச் சொல்கிறது "ஸ்ரீராந்த சூத்திர ஷாதினாம்" என்று. அதாவது, பிராமண வீட்டில் பிறந்தாலும் பெண் சூத்திரப்பெண் தானாம். நம் மண்ணில்தான் எந்த மரியாதைக்குரிய ஒன்றையும் - மொழி, நாடு, ஆறு, மலை - பெண்ணாக பாவித்து வணக்குவதுண்டு. அனால் வேதனையாக இருக்கிறது, பெண்ணுக்கு உண்மையில் இங்கு மரியாதையே இல்லை. 

     இந்தக்காதலில் கூட நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன. நாம் காதல் தோல்வி என்பதை ஆணுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்ணுக்கு ஒரு மாதிரியாகவும் பார்க்கிறோம். இந்தக்காதல் வெற்றி தோல்வி என்பதுகூட வழக்கிலே பயன்படுத்தும் சொல்தான். காதலுக்கு வெற்றியும் கிடையாது தோல்வியும் கிடையாது. காதல் என்றால் அன்பு; ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் நேசம். நாம் மற்றவர் மீது வைத்திருக்கும் அன்பும் நேசமும் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை. ஆனால் வழக்கிலே ஒரு காதல் திருமணத்தில் முடிந்தால் மட்டுமே அக்காதல் வெற்றி பெற்றதாக நாம் கருதிக்கொள்கிறோம். அது தவறு. ஒரு ஆண் தான் காதலித்த பெண்ணை மணம்முடிக்க இயலவில்லை என்றால், மனம்வருந்தி, தாடி வைத்து, சில நாட்கள் கழித்து வேறு ஒரு பெண்ணை காதலித்தோ அல்லது திருமணம் செய்துகொண்டோ தன் வாழ்க்கையை சகஜமாக்கிக்கொள்வான். அதைத்தான்  சமூகம் விரும்பும். அனால், ஒரு பெண்ணுக்கு அவ்வாறு நேர்ந்தால், அவள் கற்ப்பிழந்தவள் அல்லது ஏமாற்றப்பட்டவள் என்றுதானே நாம் சொல்லுவோம்?

   பாகவதர் காலத்திலிருந்து பவர்ஸ்டார் காலம்வரை காதலில்லாத்  திரைப்படங்கள் ஏதேனுமுண்டோ? அத்திரைப்படக் காதலை தலைமுறை தலைமுறையாக ரசித்துக்கொண்டுதானே இருக்கிறோம்? ஆனாலும் நிஜவாழ்கையில் நாம் காதலை மறுப்பதென்பது திரைப்படங்களில் காதல் முறையாக காட்டப்படவில்லை என்பதையே சுட்டுகின்றது. திரையில் காதலர்கள் ஒன்றுசேர விரும்பும் நாம், நம் குடும்பத்தில் அதற்கு பச்சைக்கொடி காட்டாமல் எதிர்ப்பதற்கான காரணம் ஒன்றுதான். நம்மிடம் சமுதாய அநியாயங்களை எதிர்த்துப்போராடவும் பகுத்தறிவுச்சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்க்கும் தெளிவும் தைரியமும் இல்லை என்பதுதான். நம் கல்வி என்னதான் செய்கிறதோ.....

     இன்றைய தலைமுறையினர் சாதி ஆதிக்கத்தால் சற்று முன்னோக்கியே  சென்றுவிட்டனர்! நான் ஒரு முறை என் நண்பரிடம் காதல் திருமணம் செய்துகொள்வீரா என்றமைக்கு அவர் கூறிய பதில் மனவருத்தத்தைத் தந்தது. "நான் என் சாதியில் பிறந்த ஒரு பெண்ணை மட்டும்  தான் காதலிப்பேன்" என்றார். ஒற்றுமை வேற்றுமை பார்த்து வருவது காதல்அல்ல. எதிர்பார்ப்புகளை எண்ணி வருவதும் காதல் அல்ல. தேடிப்போவதும் காதல் அன்று. நான் வக்காலத்து வாங்கும் காதல் அதுவல்ல. ஆனால், நான் இவ்விடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும், காதல் என்ற பெயரில் காதலர் தினம் என்று சொல்லி நம் ஊரில் ஒருசில  சீர்கேடுகள் நிகழ்கின்றன. அவையெல்லாம் திரைப்படங்களில் காதல் தவறாகக்காட்டப்படுவதினாலும் வணிகமயமாக்குதலாளும்  விளைபவை. அது சில வணிகநிறுவனங்கள் தங்கள் சுய லாபத்திற்காக செய்கிறார்கள். அதை நம் இளைய தலைமுறையினர் முதலில் உணரவேண்டும். காதலர் தினத்தில்தான் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை.

     எனவே, இதுபோன்ற விவாதங்களையெல்லாம் கிளப்புகிறபோது நம் சமூகம் முன்வைக்கும் காரணங்களைச் சற்று கூர்ந்து கவனித்தால் நமக்கு உண்மை புரியும். எல்லாம் எது சார்ந்ததாக இருக்கிறது என்றால் சாதியைக் காப்பாற்றுவதாகவும் பெண்ணை அடிமைப்படுத்துவதாகவும் உள்ளது. மதம் என்பது இந்த இரண்டோடும் நேரிடைத்தொடர்புடையதாக இருக்கிறது. எனவே காதல் என்பதெல்லாம் மேலைநாடுகளிலிருந்து வந்தது என்று நினைத்து யாராவது தடுக்க நினைத்தால், அவர்கள் பழந்தமிழ் பண்பு அறியாதவர்கள் என்றுதான் பொருள். பழந்தமிழ் நாட்டில், பழந்தமிழ் இலக்கியங்களில் சாதி வேற்றுமைகளை எல்லாம் கடந்து காதல் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே காதல்தான் இரண்டிற்கும் ஒரு பெரிய மாற்று - சாதிஆதிக்கத்திற்கும் சரி பெண்ணடிமைத்தனத்திற்கும் சரி. ஒரு பெண்ணை தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் பெண்விடுதலைக்கான தொடக்கம். திருமண உறவுகளால் மட்டுமே நம்மிடையே நிலவும் வேற்றுமைகளைக் களைய முடியும். எனவே, "காதல் வாழ்க! சாதி ஆதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வீழ்க!" என்கிற முழக்கமே காதலர்தினத்தின் உட்பொருள். ஆதலால் நண்பர்களே, காதல் செய்வீர்! காதல் செய்வீர்!! 

Tuesday, December 13, 2011

மயக்கம் என்ன ?

மு. பெரியசாமி.

"மச்சி.... ஓபன் தி பாட்டில்…"


"…..Handல glass, glassல scotch…."


"…..சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே …."

இது போன்ற வரிகள் இன்று சினிமா பாடல்களில் அதிகமாக இடம்பெறுவது சகஜமாகிவிட்டது. இது நம் நாட்டில் குடிப்பழக்கம் அதிகமாகியிருப்பதை தெளிவாக காட்டுகின்றது. முன்பெல்லாம் ஏதோ ஒருசில கட்சிகளில் மட்டுமே சினிமாக்களில் இடம்பெற்ற குடிக்கும் காட்சிகள் இன்று குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சி மெகாசீரியல்களிலும் வெகு சகஜமாக இடம் பெற தொடங்கிவிட்டது. இன்று ரேஷன் கடைகளுக்கு வரும் கூட்டத்தை விட டாஸ்மாக் கடைகளுக்கு அதிகமாக கூட்டம் வருகின்றது. இப்பொழுதெல்லாம் 13 அல்லது 14 வயதிலேயே குடிபழக்கத்திற்கு பெரும்பாலனவர்கள் அடிமையாகிவிடுகின்றனர் என்கின்றன ஆய்வுகள்.

மதுவின்மூலம் வருமானம் ஈட்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த பழக்கத்தை (Abhari excise system) இன்றும் மாற்று முகமூடியுடன் நம் அரசாங்கம் கடைபிடிக்கின்றது. மது விற்பனையை ஒரு சாதனையாகவே நம் அரசாங்கங்கள் வெளியிட தொடங்கிவிட்டது. 1983- 84இல் டாஸ்மாக்கின் வருமானம் 139 கோடி , 2003இல் 3,469 கோடி, 2010இல் 14,750 கோடியாக அதிகரித்துவிட்டது. தமிழர்கள் இதிலும் சாதனை புரிகின்றனர் எனபது வேதனையான உண்மை.


மக்களின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம் மதுவை விற்பனை செய்துகொண்டு “குடி குடியை கெடுக்கும்”, “குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது”, “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று வெட்கம் இல்லாமல் எழுதுகின்றது. இப்பொழுது  தமிழகத்தில் மேலும் 800 மது விற்பனை நிலையங்களை அரசாங்கம் தொடங்க இருக்கின்றது அதில் 200 elite shopகள் ஆகும்.

இந்தியாவில் சுமார் 62.5 மில்லயனுக்கும் அதிகமான மக்களுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. உலகிலேயே அல்கஹால் பொருட்களுக்கான மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் குடிப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதைவிட வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மது அருந்துவது  120% உயர்ந்திருக்கிறது என்பதுதான்.

ஒரு நிமிடம் , "ஒரு ஆண் குடிக்கும்பொழுது ஒரு பெண் ஏன் குடிக்க கூடாது? , அது ஏன் மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகின்றது" என்று சிலர் கேட்கலாம். ஒரு தெருநாய் சாலையில் சிறுநீர் கழிக்கின்றது எனும்பொழுது நான் ஏன் கழிக்ககூடாது என்று நீங்கள் கேட்பீர்களா? அது நமக்குதான் அசிங்கம் என்று நமக்கு தெரியும். அதுபோல்தான் இதுவும். மேலும் பெண்கள் மது அருந்துவதால் அதிகமான உடல் மற்றும் மன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறது அறிவியல் உலகம். இதுதான் இயற்கையின் நியதியும் கூட. மேலும் இருபாலரும் மது அருந்துவது தவறு என்பதுதான் என் நிலைப்பாடு.

‘Weekend’ கலாச்சாரம், ‘Party’ என்று எப்பொழுதும் மது அருந்துவது; மகிழ்ச்சி என்று மது அருந்துவது; சோகம் என்று மது அருந்துவது, இவ்வாறு பல வழிகளில் இளம் தலைமுறையான நாம் சீரழிகின்றோம். பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரிப்பதே இதற்கு சான்றாகும். நம்மில் பலர் கேட்கலாம் "குடிப்பது என்பது என்னுடைய உரிமை, என்னுடைய வாழ்கையை நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்." என்று. ஆனால் இத்தகைய எண்ணம் நம்முடைய மனதில் பன்னாட்டு பெருமுதலாளிகளால் திணிக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதை நாம் ஆழ்ந்து நோக்கினால் உணர முடியும். அவர்களின் ஆதாயத்திற்காக நம்மை இதில் மூழ்கடிக்கிறார்கள் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

நம் நாட்டில் மதுப்பழக்கம் என்பது மேலை நாட்டிலிருந்து திணிக்கப்பட்ட ஒரு பழக்கமாகும். நம்மவர்கள் மது என்னும் விஷயத்திலும் மேலை நாட்டினரைத்தான் உதாரணம் காட்டுகின்றோம். ஆனால் அவர்கள் அந்த நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மதுவை அளவாக அருந்துகின்றனர். ஆனால் நாம் அப்படியா?.

நம்மூரில் குடிப்பவர்களை கொஞ்சமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அடிக்கடி குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்று வகைப்படுத்தி, அதில் அதிகமாக குடிப்பவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றோம். எவ்வளவு குடித்தாலும் அதில்  பிரச்சனைகள் உள்ளன. குடிப்பவர்களில் சிலர் சொல்வார்கள் “நான் நினைத்தால் உடனே குடிப்பதை நிறுத்திவிடுவேன்” என்று. ஆனால் அது சாத்தியமல்ல. குறைந்தபட்சம் மதுவை விட்டு நான்கு ஆண்டுகள் விலகியிருந்தால் மட்டுமே அவர் மீண்டும் குடிக்கமாட்டார் என்பது சாத்தியமாகும். கஞ்சா, அபின், போன்ற போதைப்பழக்கத்தை கூட உடனே நிறுத்தினால் பெரிய பாதிப்பு ஒன்றும் கிடையாது. ஆனால் அதீத மதுப்பழக்கம் உள்ளவர்கள் உடனே மதுப்பழக்கத்தை நிறுத்தும்பொழுது பல்வேறு உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவம் கூறுகிறது. இது சில சமயங்களில் மரணத்தில் கூட முடியலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இதற்கு தகுந்த சிகிச்சை மூலமே தீர்வு கண்டு குணப்படுத்த முடியும்.

பெரும்பாலாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகத்தை வெளிபடுத்துவதற்கும், மன ஆபாசங்களை வெளிப்படுத்துவதற்கும் மது என்பது ஒரு முகமூடியாக அவர்களுக்கு தேவைப்படுகிறது. மனைவியிடம் வன்முறையாக நடந்துகொள்ளும் கணவர்களில் 85% பேர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது. மேலும் மதுப்பழக்கம் பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கும் காரணமாகின்றது. அரசு மதுக்கடைகள் 10 மணிக்கே மூடப்பட்டாலும் தனியார் மதுக்கடைகள் மற்றும் இரவு விடுதிகளில், நள்ளிரவு தாண்டியும் மது விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் பெண்கள் மற்றும் அப்பாவிகள் இரவில் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.

நம்மிடம் குடிப்பழக்கம் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. குடிப்பதனால் உடல்வலி குறையும் என்பது உண்மையல்ல. மது நரம்புகளை மரத்து போக வைக்கிறது, அதனால் அப்படி ஒரு உணர்வு ஏற்படலாம், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பின் வலிகள் ஏராளம். மதுவில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை. மது அருந்தினால் சோகம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், சக்தி கிடைக்கும் என்பது எல்லாம் உண்மை அல்ல. குடித்தபின் காபி குடிப்பதனாலோ, குளிர்ந்த நீரில் குளிப்பதாலோ ஆல்கஹாலின் தாக்கம்  குறைந்துவிடும் என்றும் சிலர் எண்ணுகின்றனர். அதுவும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

மது உடலின் பெரும்பாலும் எல்லா உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. அதில் ஒருசில என்னவென்றால், ஆண்மைக்குறைபாடு ஏற்படும்; இரைப்பை, கணையம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்; நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், தள்ளாட்டம், உளறல் போன்ற கோளாறுகள் ஏற்படும்; ரத்தகொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு போன்றவை ஏற்படும்; கண்பார்வை பாதிக்கும்; உடல்திறன் குறையும்; இரத்தக்குழாய்கள, இதயம் பாதிக்கப்படும் இவ்வாறு மதுப்பழக்கத்தின் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தங்கள்  வருமானத்தில் 3-45% மதுவிற்கு செலவு செய்கின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. மதுப்பழக்கதிற்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. எத்தனை குடும்பங்கள் மதுவினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துயரங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை நம் அரசு இன்னும் கண்டுகொள்ள மறுக்கின்றது. தற்கொலை செய்துகொள்பவர்களில் 34% சதவிகிதம் பேர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது . பொருளாதார நஷ்டம், அடிமை மனப்பான்மை, சமூக அந்தஸ்து இழப்பு என எவ்வளவு இழப்பு இந்த மதுபழக்கத்தால்.

மதுப்பழக்கம் என்பது ஒரு நோய் என உலக சுகாதார நிறுவனம் (WHO) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.குஜராத், மிசோரம், மணிப்பூர், மற்றும் நாகாலந்தைப்போல மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் அமுல்படுத்த அரசுகள் ஏன் இன்னும் தயங்குகின்றது. உலகிலேயே இந்தியாதான் இளமையான தேசம் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி அவர்களின் திறனையெல்லாம் இழந்து நிற்பது நம் நாட்டிற்கு இழப்பு இல்லையா. நம் அரசாங்கம் என்ன முடிவு எடுக்கபோகின்றது??? நாம் என்ன முடிவு எடுக்கபோகின்றோம்????


-->

   மதுப்பழக்கத்திலிருந்து விடுபட......

      மதுப்பழக்கம் தவறானது என்று பல பேரும் ஒத்துக்கொள்கின்றோம். ஆனால் அதை கைவிட முடியாமல் தவிக்கின்றோம். நம்மிடம் இந்த பழக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு இப்பழக்கம் இருக்கலாம். அவர்கள் இவ்வளவு பாதிப்புகளுடன் துயரங்களை அனுபவிக்கப்போவதை நாம் பார்த்துகொண்டு சும்மா இருக்கபோகின்றோமா. அவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது நம் கடமையல்லவா. மதுப்பழக்கம் என்பது குனப்படுத்த கூடிய ஒரு நோய்தான். இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு பல சிகிச்சை மையங்கள், மறுவாழ்வு மையங்கள், கவுன்சிலிங் என பல உள்ளன .'குடிப்பவருக்கு தெரியாமல் அவர்களின் குடிபழக்கத்தை குணப்படுத்த முடியும்', என்பது போன்ற பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அது உண்மைக்கு புறம்பான விஷயம். ஒரு சில அங்கிகரிக்கப்பட்ட மையங்கள் உள்ளன அவற்றை தேர்வு செய்யுங்கள்.

  ஒரு சில மையங்கள்:


     Addiction India

     Alcoholic Anonymous  

Friday, November 25, 2011

மூடர்களாய் வாழ்கிறோமே??

"மிழனென்று சொல்லடா தலை நிமிரிந்து நில்லடா" என்று சொன்னான் புரட்சிக் கவி. ஆனால், ஒரு காரணத்திற்காக நான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். நம் மொழியையும் வரலாற்றையும் மறந்தமைக்காக. சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' திரைப்படம் நம் சிந்தனையை மற்றொரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்கிறது.

இயக்குனர் திரு. முருகதாஸ் சில பல ஆழ்ந்த கருத்துக்களை முன்வைக்க முயல்கிறார். அவர் போதிதர்மன் என்னும் ஒரு தமிழனின் வரலாற்றையும் அவரின் கலைத்திறமைகளையும் சரியாகக் காட்டியுள்ளாரா என்பது சந்தேகமே. எனினும், போதிதர்மன் என்பவரைப்பற்றிய புரிதல் மக்களிடம் வந்துள்ளது. அவரைப்பற்றி சிறிதும் அறியாதவர்கள் தற்போது அவரின் பெருமைகளைப்பற்றி அறியமுயல்கிறார்கள். அவரைப்போல் இன்னும் எத்தனையோ தமிழர்களை நாமும் நம் சமுதாயமும் மறந்திருக்கிறோம். உதாரணத்திற்கு நம் சமூகவியல் (Sociology) பாடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நம் பண்டைத்தமிழ் இலக்கியவாதிகளான அகத்தியர், தொல்காப்பியர், வள்ளுவர் போன்றோர் கூறாத  சமூகவியல் சிந்தனைகளையா ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சிந்தனையாளர்கள் கூறிவிட்டனர்???

பல்லாயிரம் வருடங்களாக பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறோம் ஏன் எதற்கு என்று தெரியாமலே!! அதை "Super Brain Yoga" என்று Yale University School of Medicine உரிமை கோரியுள்ளது. அவர்களின் பலவருட ஆய்வின்படி தோப்புக்கரணம் மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறதாம். நம்  கோவில்களில் உள்ள நவகிரகங்களில் பெரியவர் வியாழன் (Jupiter) அல்லது குரு என்கிறோம். அதையேதான் அறிவியல் உலகம் நம் சூரிய குடும்பத்தில் பெரிய கிரகம் (Planet) ஜுபிட்டர் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இத்தனை காலமாக நம்பப்பட்டு வந்த ன்பதாவது கிரகமான புளுட்டோ (Pluto) ஒரு குறுங்கோளாக (dwarf planet) வரையறுக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் liv-54, 60 என்ற மருந்தைத் தவிர இன்று வரை வேறு இல்லை. அம்மருந்தானது நம் மண்ணின் மூலிகையான கீழாநெல்லியில் இருந்து செய்யப்படுகிறது. நம் தமிழ் மருத்துவத்தில் பல நூறு  வருடங்களாக  கீழாநெல்லியை உணவாக பயன்படுத்திவருகிறோம். அம்மை நோயுற்றவர்களுக்கு வேப்பிலை அடிப்பது மாரிம்மன்னுக்காகவா?? குழந்தைகளுக்கு கடவுளின் பெயரில் மொட்டையடித்தல், நெற்றியில் விபூதி பூசிக்கொள்ளுதல், வீட்டு வாசலில் கோலமிடுதல்.... இதிலெல்லாம் நம் கற்பனைக்கு எட்டாத பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கின்றன.

 உலகின் மிகத்தொன்மையான வாழும் மொழிகள் என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுவது தமிழும், சீன மொழியும்தான். அனால், சீன மொழி என்று ஒரு மொழி ண்மையில் இல்லை. அது மாண்டரின் (Mandrin) என்கிற பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழியோடு ஏத்தாழ  ஐந்து ஆறு சிறு சிறு வட்டார மொழிகளையும் குறிக்கின்றது. எனவே, உலகின் மிகத்தொன்மையான வாழும் மொழி என்றால் அது தமிழாகத்தான் இருக்கமுடியும். அனால், இக்கருத்தை நம்முள் பலரே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்! கண்டுகொள்ள மாட்டார்கள்!

இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இப்படி மூடர்களாய் வாழப்போகிறோம்?? நம்மைப்பற்றி முழுமையாய் தெரிந்துகொள்ளாமல், நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு??? நம் தலைமுறையிர் முதலில் நமது மொழியையும் நமது போற்றத்தக்க கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கற்க வேண்டும். அவற்றை அறிவியல் நோக்கில் கற்க வேண்டும். எந்த ஒரு நாடும் மக்களும் அவர்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் விட்டொழித்து முன்னேற முடியாது. அதை நாம் சீனர்களின் வெற்றிச்சரித்தித்தில் காணலாம். இத்தருணத்தில் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்!

Saturday, September 03, 2011

தூக்கு தண்டனையாகுமா ?

மு. பெரியசாமி.

மரணம்....... ஒவ்வொரு மனிதனையும் ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்து செல்லும் ஒரு வார்த்தை. பல மனிதர்களின் வாழ்க்கையில் திருப்பங்களையும், எண்ணத்தில் மாற்றங்களையும் கொண்டு வரும் ஒரு நிகழ்வு. இந்த மரணம் என்பதை ஒருவன் செய்த தவறுக்காக அந்த சமுதாயத்தின் அமைப்பானது அவனுக்கு தண்டனையாக அளிப்பது சரியா? தவறா? என்பதுதான் இன்று நம் முன் எழுந்திருக்கும் கேள்வி. பெரும்பாலான நேரங்களில் நாம் இந்த மரண தண்டனை என்னும் விஷயத்தை உணர்ச்சி பூர்வமாக அனுகுவதால்தான், இதனை நாம் சரியாக மதிப்பிட முடிவதில்லை.

மரண தண்டனை என்பதை சட்ட புத்தகத்தில் வைத்திருப்பதற்கு சொல்லப்படும் முக்கிய காரணம், அதனால் கடும் குற்றங்கள் குறையும் என்பதுதான். ஆனால், உலகில் மரண தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளிலும், மரண தண்டனை நடைமுறையில் இல்லாத நாடுகளிலும் நடக்கும் கடும் குற்றங்களின் எண்ணிகையை ஒப்பிடும் பொழுது, அதில் பெரும் மாறுதல்கள் ஒன்றும் இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. இதன் மூலம் கொலைக்கு இன்னொரு கொலை என்பது ஒரு பொழுதும் தீர்வாகாது எனபது தெளிவாகிறது.

"கண்ணுக்கு கண் என்கிற கொள்கை உலகையே குருடாக்குகிறது", என்ற காந்தியின் வார்த்தைகளில் உள்ள ஆழமான கருத்தை நாம் தெளிவாக உணர வேண்டும். கொலை செய்தான் என்பதற்காக, நாம் ஒருவனை கொள்வதும் கொலைதான் என்பதை நாம் உணர வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிப்பதனால் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்பதும் தவறான வாதம்தான். தவறு செய்தவன் தண்டிக்கபடுவதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடாது. மாறாக சமுதாயத்தில் பழி வாங்கும் உணர்ச்சி என்பது மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விடுகிறது.

தண்டனைகள் என்பது எதிர்கால சமுதாயத்தினருக்கு படிப்பினை என்றும், சமுதாயத்தினை பயப்பட வைக்கும் கருவி என்றும்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தவறு செய்பவர்களை பழி தீர்ப்பதர்க்காகவே தண்டனைகள் என்று நாம் சொல்லிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கின்றோம். இதிலிருந்து நாம் கற்காலத்தின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதை தெளிவாக இந்த மனித சமுதாயத்தின் முன் பறை சாற்றுகின்றோம்.

நாம் ஒரு கருத்தை தெளிவாக உணர வேண்டும். இந்த சமுதாயத்தில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் யாரும் இல்லை, அவர்களது சூழ்நிலைகள்தான் அவர்களை அவ்வாறு பிரதிபலிக்கின்றன. "இங்கு நிற்பவர்களில் பாவம் செய்யாதவன் எவனோ, அவன் என் மீது முதல் கல்லை எறியுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தையின் அர்த்தமும் அதுதான். ஆனால் இங்கு தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது, அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இங்கு நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது பழி வாங்குவதை அல்ல.

உண்மையான தண்டனை தவறு செய்தவனுக்கு அவன் செய்த தவறை உணர்த்துவதுதான். அது மட்டுமல்ல, எது சரி என்பதை அவனுக்கும் அவனை சார்ந்தவர்க்கும், இந்த சமுதாயத்திற்கும் உணர்த்துவதும் ஆகும்.

ஆனால் நாம் இன்று தண்டனைகள் என்று கூறி செயல்படுத்தும் அனைத்தும் தவறு செய்பவர்களை மேலும் வன்மையானவர்களாகவே மாற்றுகிறது என்பதுதான் இன்று சிறைச்சாலைகளில் நடக்கும் யதார்த்தமான உண்மை. வன்முறைகளை நாம் திருப்பி தாக்கும் பொழுது அது ஒரு பொழுதும் குறைவதில்லை, மாறாக அது மேன் மேலும் வளரத்தான் செய்கிறது. மரண தண்டனை என்பதை தீவிரவாதம், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற கொடும் குற்றங்களுக்காகதான் அளிக்கப்படுகிறது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், இதனால் இந்த தவறுகள் கண்டிப்பாக குறைவதில்லை என்பதுதான் யதார்த்தம். தீவிரவாதம் என்பது சமூக அவலங்கள் குறைந்தால்தான் குறையும், இந்த சமூக அவலங்கள் என்பது மரண தண்டனை என்னும் வன்முறையால் ஒரு பொழுதும் குறையாது என்பதை நம் உணர வேண்டும்.

சமுதாய அவலங்களை ஒழிக்கவும், சமுதாயத்தை நெறிப்படுத்தவும், சட்டங்களும் தண்டனைகளும் இன்றியமையாதது என்பது உண்மைதான். ஆனால் அது சமுதாயத்தில் வன்முறையை வளர்ப்பதாகவும், பல மனிதர்களை பழி தீர்ப்பதாகவும் இருக்கக்கூடாது. சட்டங்கள் கடுமையானதாக இருக்கலாம் ஆனால் அது பல மனிதர்களின் இதயங்களை காயப்படுத்தும் அளவு கொடுமையானதாக இருக்க கூடாது. மரண தண்டனை என்பது நம் சட்டத்தில் இருக்கும் வரை நாம் நம் தேசத்தை காந்தி தேசம் என்றும், அஹிம்சை தேசம் என்றும் கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும். மரண தண்டனையை ஒழிப்பதுதான் மக்களாட்சியின் முதிர்ச்சிக்கும், மனிதநேயத்தின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.